இந்திய அணியில் புதிதாக அறிமுகமாகும் இளம் வீரர்களுக்கு அறிவுரை தேவையில்லை எனவும், அவர்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும் எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. மூத்த வீரர்கள் பலர் அணியில் இல்லாதபோதிலும் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் புதிதாக அறிமுகமாகும் இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுரை கொடுத்துக் கொண்டே இருக்கத் தேவையில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா பேசியதாவது: இந்த தொடரை மிகவும் கடினமான சூழலில் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்ற அணியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிறைய சவால்கள் எங்களை நோக்கி எறியப்பட்டன. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டும், அறிவுரைகளை கூறிக் கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எந்த மாதிரியான சூழலில் இருக்க விரும்புகிறார்களோ அத்தகைய நேர்மறையான சூழலை அமைத்துக் கொடுத்தாலே போதும்.
துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவரது முதல் இன்னிங்ஸ் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லுடன் அவர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது சிறப்பாக இருந்தது. மூத்த வீரர்கள் அணியில் இல்லாத சமயத்தில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளனர். அவர்களது இந்த சிறப்பான செயல்பாடுகள் அவர்களின் நீண்ட கால கிரிக்கெட் பயணத்துக்கு உதவும் என்றார்.