டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல தென்னாப்பிரிக்க வீரர் தனது ஓய்வு முடிவை இன்று (ஜனவரி 8) அறிவித்துள்ளார்.
பிரபல தென்னாப்பிரிக்க வீரரான ஹென்ரிச் க்ளாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஞ்சியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். க்ளாசன் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் மொத்தமாக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் க்ளாசன் விளையாடியிருந்தார்.
இதையும் படிக்க: வங்கதேச தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றி!
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக க்ளாசன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில நாள்களாக தூக்கமின்றி நாம் சரியான முடிவைத்தான் எடுக்கிறோமா என சிந்தித்தப் பிறகு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் போட்டிகளிலிருது ஓய்வு பெறும் என்னுடைய இந்த முடிவு மிகவும் கடினமானது. ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நான் சந்தித்த போராட்டங்களே இன்று நான் கிரிக்கெட்டராக இருப்பதற்கு காரணம். இது மிகவும் சிறப்பான பயணம். எனது நாட்டுக்காக இன்னும் சில காலம் விளையாடியிருக்கலாம். என்னுடைய டெஸ்ட் போட்டியின் தொப்பி எனக்கு கிடைத்த மிக உயரிய கௌரவமாக கருதுகிறேன். என்னுடைய டெஸ்ட் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹென்ரிச் க்ளாசன் 104 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுத்த 35 ரன்களே டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் க்ளாசன் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் க்ளாசனுக்குப் பதிலாக கைல் வெரைனை தெரிவு செய்ததாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கருக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசன் என்பது குறிப்பிடத்தக்கது.