ரஞ்சி போட்டியின்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சிக் கோப்பை போட்டிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ரஞ்சிக் கோப்பையில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரை அவர் தவற விடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மிகவும் சிறப்பானதாக அமையவில்லை. இரண்டு போட்டிகளில் அவர் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அவரது எகானமி 4.64 ஆக இருந்தது.
பிரசித் கிருஷ்ணாவுக்கான காயம் சரியாக 4-லிருந்து 6 வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.