இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ரஞ்சி போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் ஷர்துல் தாக்குரும் அணியில் இடம்பெறவில்லை. யாரும் எதிர்பாராத விதமாக அக்ஷர் படேல் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணியில் புதுமுகமாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரல் இடம்பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணைக் கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம் (முதல் இரண்டு போட்டிகளுக்கு)
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), மற்றும் ஆவேஷ் கான்.