டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் விவரம் தனக்குத் தெரியும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் விவரம் தனக்குத் தெரியும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் சேர்க்கப்படாமல் போகலாம். நாங்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடியபோது, நிறைய வீரர்கள் டி20 போட்டிகளில் விளையாட பயன்படுத்தப்பட்டார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடியபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்படும்போது சிலரின் பெயர் விடுபடக் கூடும். அது அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஆனால், தெளிவாக அணியை தேர்வு செய்வதே எங்களது வேலை.
இதையும் படிக்க: ஜடேஜாவை விட அக்சர் படேல் திறமையானவர்: பார்த்திவ் படேல்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அணியில் இடம்பெறவுள்ள 8-10 வீரர்கள் யார் என எனக்குத் தெரியும். நானும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அணியில் தெளிவு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அணியை கேப்டனாக வழிநடத்தியதிலிருந்து அனைவரையும் நம்மால் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்பதை கற்றுக்கொண்டேன் என்றார்.