ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை மான் சிங் பெற்றுள்ளார்.
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங், பந்தய தூரத்தை 2 மணி நேரம் 14 நிமிடம் 19 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மான் சிங் 2 மணி நேரம் 16 நிமிடம் 58 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 11-வது இடம்பெற்றார். இந்த நிலையில், இன்று ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் அதைவிட குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார்.
மான் சிங்குக்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த ஹூவாங் யாங்செங் வெள்ளிப் பதக்கத்தையும், கிரிகிஸ்தானைச் சேர்ந்த டியாப்கின் இல்யா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்தியரான ஏபி பெல்லியப்பா 6-வது இடம் பிடித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற கோபி தொனகல் ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.