ஐசிசி கோப்பையை வெல்வதற்கான நேரம் வரும் என உறுதியாக நம்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஜியோ சினிமாவில் பேசிய ரோஹித் சர்மா ஐசிசி கோப்பையை வெல்வதற்கான நேரம் வரும் என உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறுவதைத் தவிர நாங்கள் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஐசிசி நடத்தும் தொடர்களின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வது மட்டுமே எங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. ஆனால், எங்களுக்கான நேரம் வரும் என நம்புகிறேன். கடந்த காலங்களைப் பற்றி அதிகம் யோசிக்காமல் எங்களது மனநிலையை நேர்மறையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நம்மால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. அதனால் எதிர்காலத்தை நோக்கி நேர்மறையான எண்ணங்களுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க: விராட் கோலிக்குப் பதிலாக ரஜத் படிதார்!
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நான் 5 சதங்கள் அடித்தேன். இருந்தும், இறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. சதங்கள் அடிப்பது பெரிய விஷயமில்லை. நான் ஓய்வு பெற்றதற்கு பிறகு எனது சதங்கள் குறித்து நினைத்துப் பார்க்கலாம். ஆனால், அதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கப் போகிறது. எனக்கு கோப்பையை வெல்ல வேண்டும். கோப்பையை வெல்லாமல் நீங்கள் அடிக்கும் 5-6 சதங்கள் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துவிடாது. ஒரு அணியாக கோப்பையை வெல்வது தனிநபரின் சாதனையைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்றார்.
கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.