வங்கதேச அணிக்காக மீண்டும் விளையாடுவதாக இருந்தால் அதற்கேற்ற சரியான சூழல் அமைய வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பேசியுள்ளார்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தலையீட்டுக்குப் பிறகு அவரது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்.
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றபோதிலும் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் அவர் விளையாடவில்லை. அவர் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது டி20 லீக் போட்டிகளில் தமிம் இக்பால் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், வங்கதேச அணிக்காக மீண்டும் விளையாடுவதாக இருந்தால் அதற்கேற்ற சரியான சூழல் அமைய வேண்டும் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். வங்கதேச அணியில் நான் மீண்டும் விளையாட வேண்டுமென்றால் பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் மீண்டும் வங்கதேச அணியில் விளையாடுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. எனது கிரிக்கெட் பயணத்தில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன் என நினைக்கிறேன். அதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் நான் பேச வேண்டியிருக்கிறது. அவர்களிடம் பேசாமல் என்னால் இங்கு எதுவும் கூற முடியாது. அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அவர்களிடம் கண்டிப்பாக இது குறித்துப் பேசுவேன் என்றார்.