எம்.எஸ்.தோனியின் சூசகமான முகநூல் பதிவால், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பற்றி எரிகிறது.
ஆம்... சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த சில மணி நேரத்துக்கு முன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவே இதற்கான காரணம்.
”புதிய சீசன் மற்றும் புதிய 'ரோல்'க்காக காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்!” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்திருக்கிறார்.
சிஎஸ்கே அனியின் தொடக்க வீரராக களமிறங்கி வந்த நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மென் டெவோன் கான்வே நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக விலகிவிட்டார். இந்நிலையில், தோனியின் திடீர் அறிவிப்பால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் பலரும் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை அறியாமலே, பலரும் அவருக்கு இப்போதே வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என்ற கருத்தும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் மூலம், தோனி சமூக வலைதளத்தில் சூசகமாக வெளியிட்டுள்ள பதிவுக்கான விடை என்ன? என்பது தெரிந்துவிடும்.