இங்கிலாந்து வீரரின் 100-வது போட்டியில் சுவாரசியம்!
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். பேர்ஸ்டோ தனது 100-வது ஒருநாள் போட்டியையும் தர்மசாலா மைதானத்திலேயே விளையாடினார். தற்போது அதே மைதானத்தில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
100-வது டெஸ்ட் போட்டி குறித்து பேர்ஸ்டோ பேசியதாவது: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது பெருமையாக உள்ளது. இந்த வாரம் எனக்கு உணர்வுபூர்வமான வாரமாக இருக்கப் போகிறது. மைதானத்தை சீரமைக்கும் வேலையை பணியாளர்கள் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த மைதானத்தின் தன்மை நன்றாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. ஆடுகளத்தின் தன்மை இரு அணிகளுக்கும் சாதகமானதாக உள்ளது என்றார்.
34 வயதாகும் ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 17-வது இங்கிலாந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.