இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று (மார்ச் 7) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும், பென் டக்கெட் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 57 ரன்களில் சோயிப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், ஷுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 83 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.