ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஹாரி ப்ரூக் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக நான் எடுத்துள்ள இந்த கடினமான முடிவை உறுதி செய்கிறேன். தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். அணியுடன் இணையும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். நான் விலகுவதற்கான தனிப்பட்ட காரணங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
பலரும் ஏன் என கேட்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கடந்த மாதம் எனது பாட்டி இறந்துவிட்டார். எனது சிறுவயதிலிருந்தே நான் அவரிடம்தான் வளர்ந்தேன். கிரிக்கெட் மீதான எனது ஆர்வத்துக்கு காரணமானவரும் அவர்தான். அவரது இழப்பு எனது குடும்பத்துக்கு பேரிழப்பு. இந்த நேரத்தில் எனது குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் இருக்க வேண்டியுள்ளது என்றார்.