எதிர்பார்த்ததை விட ரிஷப் பந்த் முன்கூட்டியே குணமடைந்துள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், ரிஷப் பந்த் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே குணமடைந்துள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய கிரிக்கெட் அகாடெமி மருத்துவர்கள் கூறியதாவது: ரிஷப் பந்த்தின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை அவரை விரைவில் குணமடைய செய்துள்ளது. விரைவில் குணமடைவதற்காக அவர் அளித்த ஒத்துழைப்பு எங்களால் அவருக்கு 100 சதவிகித சிகிச்சையை அளிக்க முடிந்தது. ரிஷப் பந்த் இளம் வயதில் அதிக நேரம் உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவிட்டது அவர் விரைவில் குணமடைய உதவியது.
குணமடைந்து வரும் நிலையில் ஒரே மாதிரியான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். ஒரே பயிற்சியாக இருப்பதை நினைத்து சலிப்படையாமல் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிருக்கும். இவை அனைத்தையும் ரிஷப் பந்த் தொடர்ச்சியாக செய்தார் என்றனர்.