ஜபிஎல் 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது சீசன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்டத்தை பொருத்தவரை, சென்னை அணி 6-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும். மறுபுறம் பெங்களூரு அணியோ, மகளிா் அணி சாம்பியனாகியிருக்கும் நிலையில், அந்த உத்வேகத்துடன் முதல் முறையாக கோப்பை வெல்லும் கனவுடன் வரும்.
திடீா் திருப்பமாக இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலக, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தோனி இந்த முடிவை எடுத்ததாக, அணியின் பயிற்சியாளா் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் தெரிவித்துள்ளாா்.