வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, அவர் பெரிதாக கிரிக்கெட் விளையாடவில்லை. கண் பிரச்னை மற்றும் கை விரலில் காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்தார்.
வங்கதேச அணிக்காக கடைசியாக கடந்த ஆண்டு சில்ஹட்டில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார். இதற்கிடையில், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வங்கதேச அணியின் கேப்டனாக இந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளுக்கான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே வங்கதேசம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு போட்டிகள் மே 10 (நாளை) மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.