லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் விலகவுள்ளதாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னௌ மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்தப் போட்டியில் லக்னௌவை வீழ்த்தி சன் ரைசர்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்ஜிவ் கோயங்கா, கே.எல்.ராகுலிடம் காட்டமாக விவாதிக்கும் விடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. ஒரு அணியின் கேப்டனை இவ்வாறா நடத்துவது எனப் பலரும் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் விலகவுள்ளதாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: லக்னௌ அணி தனது அடுத்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கு இடையே 5 நாள்கள் உள்ளன. தற்போதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கே.எல்.ராகுல் பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் பட்சத்தில், அணியை துணைக் கேப்டன் நிக்கோலஸ் பூரன் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.