இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியது தனக்கு மகிழ்ச்சி அளிக்காததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றியைப் பகிர்ந்து கொண்டன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியது தனக்கு மகிழ்ச்சி அளிக்காததாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் டி வில்லியர்ஸ் பேசியதாவது: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இல்லாதது வருத்தமளிக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளின் மீதுதான் நீங்கள் பழிசுமத்த வேண்டியுள்ளது. எனக்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ தவறாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி எது என்று தெரிய வேண்டுமென்றால் அனைத்து அணிகளும் தங்களுக்குள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இதையும் படிக்க: டெஸ்ட் தொடரில் இடம்பெறாத புஜாரா ரஞ்சியில் சதம் விளாசி அசத்தல்!
உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் ஆபத்தான நிலையில் உள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்த டி20 லீக் போட்டிகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த டி20 லீக் போட்டிகளால் அதிக அளவிலான சம்பளம் அவர்களுக்கு கிடைக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்களது மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தை பார்ப்பதால் அவர்களை குறை கூறவும் முடியவில்லை என்றார்.