இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் போதுமான அளவுக்கு ரன்கள் எத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவானதாக இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் இதுபோன்று அதிரடியாக விளையாடுவதில்லை. அவர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றால், ஆடுகளத்தின் தன்மை அடுத்தடுத்த நாள்களில் சிறிது மோசமாக மாறப்போகிறது என நினைக்கிறேன் என்றார்.