இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் டாம் ஹார்ட்லி சிறப்பாக விளையாடினர். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவைக் காட்டிலும் 230 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஷமர் ஜோசப் அபார பந்துவீச்சு: ஆஸியை வீழ்த்திய மே.இ.தீவுகள்!
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ரோஹித் சர்மா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் (0 ரன்), கே.எல்.ராகுல் (22 ரன்கள்), அக்ஷர் படேல் (17 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (13 ரன்கள்) இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்மூலம் 119 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோ ரூட் மற்றும் ஜாக் லீச் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்படுகின்றன. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரீகர் பரத் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.