

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்ற பதாகையை யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியின்போது பயன்படுத்தியுள்ளது.
இந்தப் பதாகையை, யுஇஎஃப்ஏ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எங்களது செய்தி இதுதான். சப்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தது.
சமீபத்தில் பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்து இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு வெறுமனே இரங்கலை மட்டுமே யுஇஎஃப்ஏ தெரிவித்தது.
இதற்காக பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா, “அவர் எப்படி, எங்கு, எதனால் இறந்தார் என்று கூற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில், கடந்த புதன்கிழமை 41 வயதான சுலைமான் அல்-ஒபெய்து கொல்லப்பட்டதாக பாலஸ்தீன கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பசி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மே மாத இறுதியில் இருந்து உணவு உதவிபெற முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றதாக ஐ.நா. கடந்த மாதம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யுஇஎஃப்ஏ இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பை ஏற்படுத்தியதற்கு கால்பந்து ரசிகர்களிடமிருந்து வரவேற்பு குவிந்து வருகிறது.
காஸா மட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தான், லெபனான், சூடான், சிரியா, ஏமன், உக்ரைன் என அனைத்து இடங்களிலும் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி பெனால்டியில் 4-3 என வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.