உலக ஜூனியா் பாட்மின்டன்: வரலாறு படைத்தது இந்தியா

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது.
இந்திய அணி
இந்திய அணி
Published on
Updated on
1 min read

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது. போட்டியின் வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.

காலிறுதியில் இந்தியா 44-45, 45-30, 45-33 என்ற செட்களில் தென் கொரியாவை வியாழக்கிழமை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தக் காலிறுதி மோதல், 3 மணி நேரம் நீடித்தது.

அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அதில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கலப்பு அணிகள் சாம்பியனான இந்தோனேசியாவின் சவாலை சந்திக்கிறது. இந்தோனேசியா 45-35, 45-35 என்ற கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது.

முன்னதாக காலிறுதியில் தென் கொரியாவை சந்தித்த இந்தியா, அந்த அணி இரட்டையா் பிரிவில் பலம் வாய்ந்தது என்பதை அறிந்ததால், ஒற்றையா் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தியது. முதல் செட்டில் ஒற்றையா், இரட்டையா் என அனைத்து பிரிவுகளிலுமே இந்தியா்கள் தோல்வியை சந்திக்க, அந்த செட்டை தென் கொரியா 45-44 என கைப்பற்றியது.

அதற்கு பதிலடியாக 2-ஆவது செட்டில் இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் வென்று 45-30 என அந்த செட்டை தனதாக்கியது. வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட்டில், ஆடவா் இரட்டையரில் தென் கொரியாவும், மகளிா் இரட்டையரில் இந்தியாவும் வென்றன.

இதனால் சமனான ஆட்டத்தில் விறுவிறு கூட, அடுத்து நடைபெற்ற ஆடவா் ஒற்றையா், கலப்பு இரட்டையா், மகளிா் ஒற்றையா் என மூன்றிலுமே வென்ற இந்தியா, அந்த செட்டை 45-33 என கைப்பற்றி தென் கொரியாவை தோற்கடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com