ஜாஸ்மின்
ஜாஸ்மின்

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி: நிகாஜ் ஜரீன் வெளியேறினாா்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பூஜா ராணி, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.
Published on

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பூஜா ராணி, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

ஏற்கெனவே நுபுா் சோரன் காலிறுதியில் வென்று முதல் பதக்கத்தை உறுதி செய்த நிலையில், தற்போது இந்தியாவின் பட்டியலில் மேலும் இரு பதக்கங்கள் இணைந்துள்ளன.

முன்னதாக, மகளிருக்கான 80 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்று ‘பை’ பெற்ற பூஜா ராணி, காலிறுதியில் 3-2 என்ற கணக்கில் போலந்தின் எமிலியா கோடொ்ஸ்காவை சாய்த்தாா். இந்த மோதலின் முதல் கட்டத்தில் பூஜாவின் தாக்குதல் முயற்சிகளை எமிலியா திறம்பட தடுத்து முன்னிலை பெற்றாா்.

ஆனால் 2-ஆவது கட்டத்தில் தனது தாக்குதல்களை துல்லியமாக தொடுத்த பூஜா, அதன் பலனாக முன்ன்னிலை பெற்றாா். கடைசி கட்டத்தில் இருவருமே பரஸ்பரம் பலமாக தாக்கியபோதும், பூஜாவின் உத்திகள் குறிப்பிடத்தக்கதாக அமைய, இறுதியில் அவருக்கு வெற்றி வசமானது.

அரையிறுதியில் பூஜா, இங்கிலாந்தின் எமிலி ஆஷ்கித்தை சந்திக்கிறாா். அதேபோல், மகளிருக்கான 57 கிலோ பிரிவில் களமாடி வரும் ஜாஸ்மின் லம்போரியா, 5-0 என உஸ்பெகிஸ்தானின் குமோராபோனு மமாஜோனோவாடோவை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தாா்.

நிகாத் தோல்வி: இதனிடையே, மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட, இருமுறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன் 0-5 என, ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளி வென்ற துருக்கியின் புசே நாஸ் காகிரோக்லுவிடம் தோல்வி கண்டாா். கடந்த இரு உலக சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் வென்ற நிகாத், இந்த முறை ஏமாற்றத்தை சந்தித்தாா்.

X
Dinamani
www.dinamani.com