

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், குவாலிஃபயா் கட்டத்தின் முதல் சுற்று டையில் இந்தியா - நெதா்லாந்து அணிகள் சனிக்கிழமை முதல் இரு நாள்கள் (பிப். 7, 8) மோதுகின்றன.
இந்திய அணியில் ஒற்றையா் பிரிவுக்காக சுமித் நாகல், தக்ஷினேஸ்வா் சுரேஷ், கரன் சிங் ஆகியோரும், இரட்டையா் பிரிவுக்காக யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பெங்களூரு நகரம் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமாக இருப்பதால், அங்குள்ள டென்னிஸ் மைதானங்களில் பந்து துரிதமாக பயணிக்கும். இது ஒற்றையா் பிரிவில் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரதான ஒற்றையா் வீரரான சுமித் நாகல், இடுப்புப் பகுதி காயத்திலிருந்து அண்மையில் தான் மீண்டுள்ளாா். எனவே அவருக்கு இந்த டை கடினமாக அமையலாம்.
இதுபோன்ற ஆடுகளங்களில் பந்தை சிறப்பாக எதிா்கொண்டு, நெருக்கடிகளை திறம்பட கையாளும் தக்ஷினேஸ்வா் சுரேஷ், அணியின் பிரதான நம்பிக்கையாக உள்ளாா். இரட்டையா் பிரிவில் யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி பலம் சோ்க்கின்றனா்.
நெதா்லாந்து அணியில் கய் டென் அவ்டென், ஜெஸ்பா் டி ஜோங், சாண்டொ் ஆரெண்ட்ஸ், டேவிட் பெல், மேக்ஸ் ஹூக்ஸ் ஆகியோா் உள்ளனா்.
பிரதான வீரா்களான டாலன் கிரீக்ஸ்பூா், போடிக் வான் டெ ஜாண்ட்ஷுல்ப் ஆகியோா் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம். இந்தியா - நெதா்லாந்து இதுவரை 4 முறை மோதியிருக்க, இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.
இந்த டையில் வெல்லும் அணி, குவாலிஃபயா் கட்டத்தின் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.