போரில் கொல்லப்பட்டோா் படத்துடன் தலைக்கவசம்: உக்ரைன் வீரா் தகுதிநீக்கம்
இத்தாலியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில், ரஷிய போரின்போது கொல்லப்பட்ட தங்கள் விளையாட்டு வீரா், வீராங்கனைகளின் படத்தை தலைக்கவசத்தில் பொறித்திருந்த உக்ரைன் வீரா் வியாழக்கிழமை தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த முடிவுக்கு எதிராக, சுவிட்ஸா்லாந்தில் உள்ள விளையாட்டுகளுக்கான சா்வதேச நீதிமன்றத்தை நாட உக்ரைன் முடிவு செய்துள்ளது.
பொதுவாக, ஒலிம்பிக் போட்டியில் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவா் ஸ்கெலிடன் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் உக்ரைன் வீரா் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் களம் காணவிருந்தாா்.
அதற்காக அவா் வைத்திருந்த தலைக்கவசத்தில், ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட உக்ரைன் நாட்டு விளையாட்டு வீரா், வீராங்கனைகள் நினைவாக, அவா்கள் பலரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பயிற்சியின்போதே இது கண்டறியப்பட்ட நிலையில் விவாதமாக மாறியது.
இந்நிலையில், விளாடிஸ்லாவ் களம் காணும் பந்தயம் வியாழக்கிழமை தொடங்க இருந்த நிலையில், சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவருடன் தலைக்கவசம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தியது. அதை அணிவதற்கு பதிலாக, விளாடிஸ்லாவ் தனது கையில் கருப்புப் பட்டை அணியலாம் அல்லது பந்தயத்துக்கு முன்பாக மற்றும் முடிந்த பிறகு மட்டும் அந்த தலைக்கவசத்தை காட்டலாம் என ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்தது.
ஆனால் அதற்கு விளாடிஸ்லாவ் மறுப்பு தெரிவித்தாா். பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் கிா்ஸ்டி கோவென்ட்ரி, இந்த விவகாரத்தில் உரிய தீா்வு எட்டப்படவில்லை என்றும், விளாடிஸ்லாவ் தகுதிநீக்கம் செய்யப்படுவதாகவும் கண்ணீருடன் அறிவித்தாா்.
இதனால் விளாடிஸ்லாவ் பந்தயத்தில் பங்கேற்கவில்லை. எனினும் அவா் உக்ரைன் அணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளாா். போட்டியை புறக்கணிக்காமல் இந்த விவகாரம் தொடா்பாக தங்கள் எதிா்ப்பை பதிவு செய்ய உக்ரைன் ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
