
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோஹித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. உலகக் கோப்பை நிறைவடைந்ததோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பணிக்காலமும் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோஹித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியதாவது: தொடர்ச்சியாக ஒரு விஷயம் நடைபெறுவதை விரும்பும் நபரான நான், இந்திய அணியில் நிறைய விஷயங்களை மாற்றவில்லை. ஏனெனில், நிறைய விஷயங்களை மாற்றினால் அணியின் வலிமை பாதிக்கப்படும். அணியில் சிறப்பான சூழல் நிலவாது. அணியில் ஒரு அங்கமாக இருக்கும் நான், வீரர்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமென்று நினைத்தேன்.
கரோனா பேராபத்துக்குப் பிறகு அணியின் பயிற்சியாளராக பதவியேற்றேன். கரோனாவுக்குப் பிறகு, மூன்று வடிவிலான போட்டிகளுக்குமான அணியின் வேலைப்பளுவை சரிவர நிர்வகிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருந்தது. ரோஹித் சர்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
ரோஹித் சர்மாவை இளம் வயதிலிருந்தே எனக்குத் தெரியும். கடந்த 10-12 ஆண்டுகளாக ஒரு வீரராகவும், கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அதிக பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அணியின் பயிற்சியாளராக அவரிடம் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. கேப்டனாக அவரது தனித்தன்மையுடன் அணியை வெற்றி பெற செய்ய அவருக்கு உதவினேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.