ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கேஸ் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க சிறப்பு கூப்பன் முறை அறிமுகம்

சென்னை, ஏப். 26: தமிழகத்தில் சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதில் முறைகேடுகளைத் தடுக்க, சிறப்பு கூப்பன் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிகத் தேவைகளுக்கா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:45 am

ச. குமரன்

சென்னை, ஏப். 26: தமிழகத்தில் சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதில் முறைகேடுகளைத் தடுக்க, சிறப்பு கூப்பன் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிகத் தேவைகளுக்காக சமையல் வாயு சிலிண்டர்களை இண்டேன், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகம்

முழுவதும் இதுவரை வழங்கப்பட்டுள்ள சமையல் வாயு இணைப்புகளின் எண்ணிக்கை 1.02 கோடியை எட்டியுள்ளது.

இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் இண்டேன் நிறுவனம் மட்டுமே 50 சதவீதத்துக்கும் மேலான சிலிண்டர்களை விநியோகித்து வருகிறது.

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதையடுத்து சமையல் வாயு இணைப்புகளை வைத்துள்ளவர்களின் முழு விவரங்களையும் ஆய்வு செய்து சரிபார்க்குமாறு கேஸ் விநியோகஸ்தர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக ஒரு நபருக்கு ஒரே ஒரு இணைப்புடன் கூடுதலாக இரண்டாவது சிலிண்டர் விநியோகிக்க மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், இப்போது பல்வேறு போலி பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை பலர் பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதே போல தங்களது உறவினர்களிடம் இருந்தோ அல்லது நண்பர்களிடம் இருந்தோ அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலிண்டர் இணைப்புகளைப் பெற்று பயன்படுத்தி வருவதும் கண்டறியப்புட்டுள்ளது. இதுதவிர சமையல் வாயு விநியோகிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் வீட்டில் பல நாள்கள் இல்லாத பட்சத்தில், வேறு யாருக்காவது சிலிண்டர்களை முறைகேடாக விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.

சென்னை போன்ற இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு கேஸ் சிலிண்டர்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விநியோகிப்பதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் இண்டேன் சமையல் வாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு இருப்பிடச் சான்றுடன் நேரில் வந்து கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 இதன் மூலம் சமையல் வாயு சிலிண்டர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு, அவரது முகவரியில் விநியோகிப்பது உறுதி செய்யப்படுகிறது. இதுதவிர பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினர் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு பதிவு தபால் அனுப்பி, அதற்கான ஒப்புகை அட்டையில் உள்ள கையொப்பத்தையும், அந்த முகவரியில் இப்போது உள்ளவர்கள் குறித்தும் உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், இண்டேன் கேஸ் விநியோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன் ஒட்டும் புதிய திட்டம் சென்னை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 24 கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. இதில் வாடிக்கையாளரின் பெயர், சமையல் வாயு இணைப்பு எண், கூப்பன் எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். சம்பந்தப்பட்ட விநியோகிப்பாளரின் அலுவலகத்தில் இந்த எண் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு முறையும் கேஸ் சிலிண்டரை விநியோகிக்கும் ஊழியரிடம் இருந்து ஒப்புகைச் சீட்டை வாடிக்கையாளர்கள் பெற்று, இந்தக் கூப்பனை ஒட்டி கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.

இந்தக் கூப்பன்கள் எதிர்பாராத வகையில் காணாமல் போனால், அந்தந்த விநியோகிப்பாளரை நேரில் அணுக வேண்டும்.

இப்போது சமையல் கேஸ் சிலிண்டர்களை வீடுகளின் முகவரிக்கே வந்து விநியோகிக்க 5 கிலோ மீட்டர் வரை கட்டணம் இல்லை. ஆனால், இனி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ரூ. 10-ம், 10 கிலோ மீட்டருக்கு மேல் ரூ. 20-ம், 30 கிலோ மீட்டர் தூரம் வரை சிலிண்டருக்கு ரூ. 30-ம் கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.