

பண்ருட்டி, ஜூலை 6: நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களின் அலட்சியத்தால் நெடுஞ்சாலையில் நடப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான புளியமரக் கன்றுகள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இளைப்பாறவும், மண் அரிப்பை தடுக்கவும், சாலை ஓரத்தில் நிழல் தரக் கூடிய மற்றும் பலன் அளிக்கக் கூடிய மரங்கள் நடப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, ஊராட்சி இடத்தில் இருக்கக் கூடிய மரங்களை அந்தந்த துறையினர் நட்டும், வளர்த்தும் பராமரித்து வருகின்றனர். ஏரி, ஆறு, குளம், களம் உள்ளிட்ட பொது இடத்தில் உள்ள மரங்களை வருவாய்த் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் காடு, நிலங்கள் அழிந்து மனைப் பிரிவுகளாகவும், கட்டடங்களாகவும் மாறிவரும் நிலையில், தற்போது மரம் வளர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி ஊக்குவித்து வருகிறது.
இதனால் சாலைகள் ஓரம் மரம் நட்டு பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து வருகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நடுவதற்காக பண்ருட்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு ஆயிரக்கணக்கான புளியங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
அலுவலகத்தின் அருகே இறக்கி வைக்கப்பட்டுள்ள இந்த புளியங்கன்றுகளுக்கு தண்ணீர் விடாததால் காய்ந்து வருகிறது.
அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் என பலர் இருந்தும், அருகிலேயே தண்ணீர் வசதி இருந்தும் யாரும் கண்டுக்கொள்ளாததால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட புளியங்கன்றுகள் காய்ந்து வருகிறது.
அண்மையில் பண்ருட்டியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் கூறியது:
நடப்பாண்டில் நெடுஞ்சாலையில் நட 10 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கிக் கொடுத்து நட்டு வருகிறோம் என கூறினார்.
இதில் பண்ருட்டி பகுதிக்கு நட கொடுக்கப்பட்ட கன்றுகள் பல காய்ந்துவிட்டன. எஞ்சியுள்ள கன்றுகளாவது நடும் வரை பாதுகாக்கப்படுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.