கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுமா?

தஞ்சாவூர் : மேட்டூர் அணை திறப்பது குறித்து டெல்டா மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. 16 ஆண்டுகள் விசாரணைக்குப் பிற
கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுமா?
Updated on
2 min read

தஞ்சாவூர் : மேட்டூர் அணை திறப்பது குறித்து டெல்டா மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

16 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 5.2.2007 அன்று கர்நாடக அரசு காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம். ஆனால், இந்தத் தீர்ப்பை அமல்படுத்தாமல், அலட்சியப்படுத்தி வருகிறது கர்நாடகம். இதனால், இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.

தமிழக டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அணையில் போதிய நீர் இல்லாததாலும், நீர்வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் நிகழாண்டும் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியின் பரப்பளவு குறைந்ததுடன், ஆழ்குழாய் பாசன விவசாயிகளின் சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணை திறப்பது குறித்தோ, கர்நாடகம் தமிழகத்துக்கு ஜூலை மாதம் வழங்க  வேண்டிய தண்ணீரைப் பெறுவது குறித்தோ அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இதனால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதென விவசாயிகள் திட்டவட்டமாக அறிந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் நிகழ்ந்த விவசாயப் பிரதிநிதிகளின் கருத்து கேட்புக் கூட்டமாவது நடைபெறுமா என எதிர்பார்க்கின்றனர்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை வழக்கமான ஜூன் 12-ம் தேதி திறப்பதில் தாமதம் ஏற்படுமானால், அதற்கு முன்னதாக விவசாயப் பிரதிநிதிகளை நேரில் அழைத்து ஆலோசனை மற்றும் கருத்துகேட்புக் கூட்டம் நடத்துவது வழக்கம். கடந்த காலங்களில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வேளாண்மை அமைச்சராக இருந்த கோ.சி. மணி ஆகியோரது தலைமையில் இக் கூட்டம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அணை திறப்பு தேதி அறிவிப்பு வெளியாவது வழக்கம்.

நிகழாண்டு குறுவைக்கு வழக்கமாக அணை திறக்கப்படும் நாள் கடந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், மேட்டூர் அணை திறப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை பொய்த்துப் போன காலத்தை தேசிய பேரிடர் இழப்பாக அறிவித்து, மீனவர்களுக்கு மீன்பிடி இல்லாத காலத்துக்கு இழப்பீடு வழங்குவது போல, விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறார் விவசாயி சுவாமிமலை விமலநாதன்.

மேலும், காவிரி நீரைப் பெற்றுத் தரும் பொறுப்பில் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 42.76 டி.எம்.சி. தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com