திருவெறும்பூர் : தமிழகத்தில் அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்தும் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 540 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ளன. அதில் 4 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது போல தமிழக முழுவதும் 210 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பேரூராட்சிகளில், மற்றொரு பேருராட்சி செயல் அலுவலர் கூடுதலாகக் கவனித்து வருகிறார்.
இப்படி பணியாற்றுவதால் செயல் அலுவலர்கள் ஒரு பேருராட்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பேரூராட்சியில் அரசின் நலத்திட்டப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கூத்தைப்பார் பேரூராட்சி பொதுமக்கள் கூறியது:
பேரூராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், அரசின் நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்தால் செயல் அலுவலர் வரவேண்டும் என பேரூராட்சிப் பணியாளர்கள் கூறுகின்றனர். செயல் அலுவலர் எப்பொழுது வருவார் என்பதே தெரியாத நிலையில், சான்றிதழ்களைப் பெற நாள் தோறும் அலைய úண்டியுள்ளது என்கின்றனர்.
இதுகுறித்து சங்கத்தில் அமைப்புச் செயலாளராக இருந்துவரும் பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியது:
தமிழகத்தில் 210 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. செயல் அலுவலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்காததே இதற்குக் காரணம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த செயல் அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 20 ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மாநில அளவில் பணி மூப்பு அடிப்படையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதை அமல்படுத்துவதற்காக 2009 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் தீர்ப்பில் இல்லாதது சேர்க்கப்பட்டிருந்தது. இரண்டாம் நிலை செயல் அலுவலர்களுக்கும், தலைமை எழுத்தாளர்களுக்கும் சமநிலை அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் பதவி உயர்வு சிக்கல் மீண்டும் வந்தது. 31.12.2009 தேதியில் பேரூராட்சி இயக்குநர் மாநில அளவில் பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் பணி மூப்பு அடிப்படையில் 240 பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன.
இதுகுறித்து முதுநிலை செயல் அலுவலர்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால்தான் பல பேரூராட்சிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன' என்றார் அவர்.
இரண்டாம் நிலை செயல் அலுவலர்கள், தலைமை எழுத்தாளர்கள் என்ற சமநிலையை நீக்கி, முதுநிலை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே இந்தப் பிரச்னை தீரும் என பேரூராட்சிப் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
செயல் அலுவலர்கள் ஒரு பேரூராட்சியில் நிரந்தரமாகப் பணிபுரிந்தால் மட்டுமே வளர்ச்சிப் பணிகளில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம், அரசுத் திட்டப் பணிகளும் மக்களைச் சென்றடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.