விழுப்புரம், மார்ச் 24: தமிழகத்தில் அறுவடை செய்த தேங்காயை விற்பனை செய்ய உகந்த நேரம் இது என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் தென்னை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டங்களின் பரப்பு மாநிலப் பரப்பின் 80 சதவீதமாகும்.
வேளாண் துறை கடந்த 10 ஆண்டுகளாக பொள்ளாச்சி சந்தைகளில் நிலவிய விலைகளை ஆய்வுசெய்தது. மேலும் பொள்ளாச்சி, அவல்பூந்துறை சந்தைகளில் வர்த்தகர்களிடம் ஆய்வு நடத்தியது.
மொத்த தேங்காய் உற்பத்தியில் 35 சதவீதம் தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்டாலும், தேங்காய் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் எண்ணெய் விலையைப் பொறுத்தே இருக்கின்றன. பாமாயில் இறக்குமதி தேங்காய் எண்ணெய் விலையைப் பாதிக்கிறது.நவம்பர் 2009 முதல் ஜனவரி 2010 வரை 14,39,705 டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட இரண்டு சதவீதம் அதிகமாகும். எண்ணெய் பிழிவோர் சங்க ஆய்வின்படி நாட்டில் 2009-10-ல் 6.6 லட்சம் டன் கொப்பரையும், 4.3 லட்சம் டன் தேங்காய் எண்ணெயையும் உற்பத்தி செய்யும். இது சென்ற ஆண்டைவிட 1.5 சதவீதம் அதிகமாகும்.
அவல்பூந்துறை ஒழுங்குமுறை சந்தை தமிழகத்திலுள்ள மிகப்பெரிய கொப்பரை சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எண்ணெய் ஆலையினர் இச் சந்தையிலிருந்து கொப்பரைகளை கொள்முதல் செய்கின்றனர். தற்போது வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ ரூ.31-க்கு கொள்முதல் செய்கின்றனர். கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களின் இளநீர் தேவை தற்போது ஏறுமுகத்திலேயே உள்ளது. விவசாயிகள் இளநீருக்காக குறுகிய காலங்களில் பலனைத் தரும் ரகங்களையே நடவு செய்ய விரும்புகின்றனர்.
தேங்காய் விற்பனை நிலை குறித்து வேளாண் வணிக துணை இயக்குநர் என்.தனவேல் கூறியது:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மைய ஆய்வின்படி மார்ச் முதல் ஜூன் 2010 வரை பண்ணை அளவில் தேங்காய் விலை காய் ஒன்றுக்கு ரூ.4.25 முதல் ரூ.4.80 வரை நிலவும். மேலும் ஜூன் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே விவசாயிகள் உடனே தங்களிடம் உள்ள தேங்காயை விற்பனை செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர் என்றார். தேங்காயின் விலை ஜூன் மாதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இல்லாததால் விவசாயிகள் உடனே விற்பனை செய்வதே பாதுகாப்பானது என்றார் வேளாண்மை இணை இயக்குநர் கு.ராமலிங்கம்.