ஆனால் மண் பரிசோதனை, நீர் வள ஆதாரங்கள் முறையாக இல்லாததால் திட்டமிட்டப்படி போதுமான தண்ணீர் கிணறுகளில் கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2001- 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.5 கோடியே 83 லட்சம் செலவில் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி திருப்பாற்கடலில் இருந்து அரக்கோணம் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் திருத்தணிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன. இருந்தும், கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் இந்த திட்டம் எப்போது மக்களிடையே சென்று சேரும், குடிநீர் பிரச்னை எப்போது தீரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் திருத்தணியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நிலைகளில் முயற்சி எடுத்து வருகிறது. வேலஞ்சேரி, காசிநாதபுரம், டி.வி. புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் கொள்முதல் செய்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தெருக்குழாய்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையால் தற்போது டிராக்டர், லாரிகள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். கால ஓட்டத்தாலும், பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேறினால் மட்டுமே திருத்தணிக்கு நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அரசு செய்யுமா?