மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சீர்கெட்டுக் கிடக்கும் தமிழ் மன்னனின் கல்லறை

வேலூர், மே 3: இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கனின் கல்லறையான முத்து மண்டபம் சீர்கெட்டுக் கிடக்கிறது. இதைப் பராமரிக்க தமிழக அரசு மாதம் ரூ.150 மட்டுமே ஒதுக்கியுள்ளது. இத் தொகையைக் கொண்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:54 pm

வேலூர், மே 3: இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரம ராஜ சிங்கனின் கல்லறையான முத்து மண்டபம் சீர்கெட்டுக் கிடக்கிறது.

இதைப் பராமரிக்க தமிழக அரசு மாதம் ரூ.150 மட்டுமே ஒதுக்கியுள்ளது.

இத் தொகையைக் கொண்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்புப் பணிகள் செய்ய முடியாததால் முத்து மண்டபம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

இலங்கையின் கண்டியை கி.பி.1798 முதல் கி.பி.1815-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் விக்ரம ராஜ சிங்கன். இவரது இயற்பெயர் கண்ணுசாமி. புதுக்கோட்டை அடுத்துள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்தவர்.

மன்னர் ராஜாதி ராஜ சிங்கனுக்கு (கி.பி.1782 - கி.பி.1798) வாரிசுகள் இல்லாததால், அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவியரின் தம்பிகளில் ஒருவரான விக்ரம ராஜ சிங்கன் கண்டியை ஆண்டார்.

கண்டியைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் 4 முறை போர் தொடுத்து, இறுதியாக மன்னர் விக்ரம ராஜ சிங்கன் மற்றும் அவரது மனைவி, மகன், உறவினர்கள் அனைவரையும் கி.பி.1816-ல் வேலூர் கோட்டையில் அடைத்து வைத்தனர்.

சிறை வைக்கப்பட்ட மன்னர் விக்ரம ராஜ சிங்கன், 1832 ஜனவரி 31-ம் தேதி இதே இடத்தில் மறைந்தார். அவரை, பாலாற்றங்கரையில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து, 1843-ல் மரணமடைந்த அவரது மகன் ரங்கராஜா, மனைவி ராஜலட்சுமிதேவி, கொள்ளு பேரன் நரசிம்மராஜா, மன்னர் விக்ரம ராஜசிங்கனின் மற்ற 3 மனைவிகளும், பட்டத்தரசி சாவித்ரி தேவியும் இதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

அப்போதைய திமுக அரசு சார்பில் கடந்த 1990 ஜூலை 1-ம் தேதி விக்ரம ராஜ சிங்கன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.7 லட்சத்தில் 2.12 ஏக்கரில் முத்து மண்டபம் கட்டப்பட்டது. அவரது கல்லறை அருகேயே மனைவிகள், மகன், உறவினர்கள் என 7 பேருக்கு கல்லறை அமைக்கப்பட்டது.

இவற்றைப் பராமரிக்க முனியம்மா எனும் துப்புரவுத் தொழிலாளி மட்டும் உள்ளார். இவர் கடந்த 1990-ம் ஆண்டு மாதம் ரூ.60 ஊதியத்தில் நியமிக்கப்பட்டார். தற்போது மாதம் ரூ.150 பெறுகிறார். அதில் ரூ.15 துடைப்பம் வாங்க செலவு செய்கிறார். இவர் மட்டுமே தினசரி காலையும், மாலையும் முத்து மண்டபத்தைத் திறந்து, அதை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்.

வேலூரில் குறிப்பிடப்படும் முக்கியமான சுற்றுலா தலங்களில் இந்த முத்து மண்டபமும் ஒன்று. ஆனால், பராமரிப்பு இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளில் 100க்கும் குறைவான சுற்றுலா பயணிகளே இங்கு வருகை தந்துள்ளனர்.

முத்து மண்டபம் கேட்பாரற்று உள்ளதால் பகலில் சூதாட்டமும், இரவில் தகாத செயல்களும் நடைபெறுகின்றன. மண்டபத்தைச் சுற்றி வசிக்கும் குடிசைவாசிகளாலும் மண்டபம் வீணடிக்கப்படுகிறது. மண்டபத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. கட்டடம் புதியதாக இருக்கிறது; ஆனால் உள்ளே அனைத்தும் சேதமடைந்து, துர்நாற்றம் வீசுகிறது.

முத்து மண்டபத்தின் கட்டடப் பராமரிப்புப் பணி பொதுப்பணித்துறை வசம் இருந்தாலும், மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பு செய்தி மக்கள் தொடர்பு துறை வசம் உள்ளது. இவர்களோ, துப்புரவுத் தொழிலாளிக்கு மாதம் ரூ.150 ஊதியம் வழங்குவதோடு தங்களது கடமையை நிறைவு செய்கின்றனர்.

முத்து மண்டபத்தை முறையாக பராமரிக்க அலுவலர்கள், இரவுக் காவலர்கள் நியமிக்க வேண்டும். அப்போதுதான் இங்கு நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியும்.

இலங்கையின் கடைசி தமிழ் மன்னனுக்கு நினைவு மண்டபம் கட்டிய திமுக அரசு, அதைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வேலூர் மக்களின் ஆதங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.