நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புறநகர் ரயில் நிலைய கவுன்டர்களில் அலைமோதும் கூட்டம்: அரை மணி நேர பயணத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருப்பு

சென்னை : சென்னையில், முக்கிய புறநகர் மின் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகிப்பதில் கடும் தேக்க நிலை நிலவுகிறது. இதனால், தினமும் நீண்ட வரிசையில்  காத்திருந்து பயணிகள் அவதிப்படுகின்றனர். நெரிசலைச் சம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:52 pm

ச. குமரன்

சென்னை : சென்னையில், முக்கிய புறநகர் மின் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகிப்பதில் கடும் தேக்க நிலை நிலவுகிறது. இதனால், தினமும் நீண்ட வரிசையில்  காத்திருந்து பயணிகள் அவதிப்படுகின்றனர்.

நெரிசலைச் சமாளிக்க நிறுவப்பட்ட தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களும் (ஏ.டி.வி.எம்.) செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை- சென்ட்ரலில் இருந்து பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கு தினமும் 690-க்கும் மேற்பட்ட மின் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 10.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பயணிகள், மின் ரயில்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

இதில் 47 சதவீதம் பேர் வரை மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்துகின்றனர். எனினும், 53 சதவீதம் பேர் ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சாதாரணமாக கடற்கரையில் இருந்து மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணிகள்கூட டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு முன்பு ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

சென்னை கடற்கரை, பூங்கா, நுங்கம்பாக்கம், மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்ர்களில் பல ஆண்டுகளாக ஊழியர்களின் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை.

தூங்காத, பூங்கா ரயில் நிலையம்: இதில் சென்னை சென்ட்ரலுக்கு மிக அருகில் பூங்கா ரயில் நிலையம் உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ரயில்களில் தினமும் வந்து சேரும் லட்சக்கணக்கான பயணிகள், பூங்கா நிலையம் வழியாகத் தான் புறநகர் ரயில்களில் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.

பாரிமுனை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்லவும் பூங்கா ரயில் நிலையம் பிரதான வழித்தடமாக உள்ளது.

ஆனால், இங்கு 3 கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ளதால், இந்த நிலையத்தில் டிக்கெட் வாங்க ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் தவம் கிடக்கும் பரிதாப நிலை உள்ளது. அதிலும் இரவில் 2 கவுன்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன.

இதே போல கடற்கரை ரயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கும் அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

நினைவுச் சின்னங்களாக மாறிய டிக்கெட் இயந்திரங்கள்: இந்த நிலையில், முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் கவுன்ட்டர்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் டிக்கெட் வழங்கும் 100 இயந்திரங்களை தெற்கு ரயில்வே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியது.

இதில் பயணிகளே, தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொள்ள வசதியாக ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பயணிகளிடையே பிரசாரம் செய்யும் வகையில், ஏன் வரிசையில் நிற்கிறீர்கள்! புத்திசாலியாக இருங்கள். ஸ்மார்ட் அட்டை நேரத்தை சேமிக்கும் என்ற வாசகங்களுடன் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

காகிதச் சுருள் தட்டுப்பாடு...இந்த திட்டம் இப்போதுதான் படிப்படியாக பயணிகளிடையே பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த இயந்திரங்களில் டிக்கெட் அச்சிடத் தேவையான காகிதச் சுருள்களை தில்லியைச் சேர்ந்த ஹிண்டன் ஃபார்ம் என்ற நிறுவனம் விநியோகித்து வந்தது.

கடந்த 6 மாதங்களாக இந்த காகிதச் சுருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தானியங்கி இயந்திரங்கள் நினைவுச் சின்னங்களாக மாறி வருகின்றன.

இதற்கிடையே திருவள்ளூர், அம்பத்தூர், பெரம்பூர், அரக்கோணம் உள்ளிட்ட 6 நிலையங்களில் ஜன சாதாரண டிக்கெட் வழங்கும் திட்டத்தின் கீழ் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், கவுன்ட்டர்களில் நெரிசல் குறையவில்லை.

இந்த நிலையில், ஸ்டட் வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது பயணிகள், ரயில்வே அலுவலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

படித்த வேலைதேடும் இளைஞர்கள், சுய உதவிக் குழுவினருக்கு, இப்போதுள்ள ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் டிக்கெட் விநியோகிக்க வாய்ப்பளித்தால், கவுன்ட்டர்களில் நெரிசல் தீரும். தெற்கு ரயில்வே முன்வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.