/

திறக்கப்படுமா காரனோடை புதிய பாலம்?

பொன்னேரி, நவ. 15: தேசிய சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள காரனோடை பாலம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அங்கு கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:07 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, நவ. 15: தேசிய சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள காரனோடை பாலம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அங்கு கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை முதல் ஆந்திர மாநில நுழைவு எல்லையான தடா வரை 43கி.மீ தூரத்துக்கு, ரூ418கோடியே 80லட்சம் மதிப்பில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி, கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் இச்சாலையில் உள்ள காரனோடை பகுதியில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் மீது புதிய பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று அப்பணிகள் அண்மையில் முடிவடைந்துள்ளன.

இந்த ஆற்றின் மீது ஏற்கனவே இரண்டு பாலங்கள் அமைந்திருந்தன. இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 125ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் ஒன்று கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து தற்பொழுது ஆற்றில் உள்ள மற்றொரு பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. நாள்தோறும் ஆந்திரம், ஒரிசா, கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியே சென்று வருவதன் காரணமாக எப்பொழுதும் இச்சாலை போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.

நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் காரனோடையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் வழியாக சென்று வருவதன் காரணமாக எப்போதும் நெரிசல் காணப்படுகிறது. அத்துடன் நாள்தோறும் மாலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்து பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இப்பாலத்தை கடக்க முற்படும் வாகனம் ஏதேனும் திடீரென பழுதாகி நின்று விடுவதன் காரணமாக அங்கு போக்குவரதத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அது சீரடைவதற்கு 3மணி நேரம் முதல் 4மணி நேரம் வரை ஆகின்றது. இதனால் இப்பாலத்தை கடந்து அவசரமாக சென்னை, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்ல முற்படும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் இப்பாலம் அருகே எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் உள்ளதன் காரணமாக இச்சாலையில் ஏதும் விபத்து ஏற்பட்டால் அதில் காயமடைபவர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கோ அல்லது அரசு பொது மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட விரைந்து கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

பொதுமக்கள் அவதி: கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை, பண்டிக்காவனூர், அழிஞ்சிவாக்கம், பஞ்செட்டி, ஆண்டாள்குப்பம், சின்னம்பேடு, ஆரணி, பெரியபாளையம், கன்னிகைப்பேர், புதுவாயல், பெருவாயல், மாதவரம், சைனாவரம், பழவேற்காடு, பொன்னேரி, மெதூர், திருப்பாலைவனம், அனுப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து மூலம் நாள்தோறும் சென்னை சென்று வரும் பயணிகள் பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரிதும் அவதிப்படுகின்றனர்.

புதிய பாலத்தை திறக்க கோரிக்கை: புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்து இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ள பாலத்திற்கு விரைந்து இணைப்பு சாலை அமைத்து புதிய பாலத்தை திறந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால்தான் அங்கு ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.

எனவே நாள்தோறும் இச்சாலையில் சென்று வரும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ள எல்.அன்.டி தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.