சென்னை, ஜன. 29: ரயில், பஸ் பயணங்களுக்கு மட்டுமல்ல படிப்புக்குக்கூட முன்பதிவு அவசியம் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.
மாணவர் சேர்ப்பு நடைமுறைகள் தொடங்காதது ஒருபுறம் இருக்கட்டும். பிளஸ்-2 தேர்வே இன்னும் தொடங்கவில்லை.
அதற்குள்ளாக சில தனியார் பொறியியல் கல்லூரிகள் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு மறைமுக அட்மிஷனைத் தொடங்கிவிட்டன.
பிளஸ்-2 தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்குகிறது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகே அந்தத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும்.
அதன் பிறகு ஜூன் இறுதியில் தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்ப்புக்கான
நடைமுறைகளை 4 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.
இப்போதே முன்பதிவு: இந்த நிலையில் சில தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இப்போதே "முன்பதிவு' என்ற பெயரில் பொறியியல் படிப்புகளில் மறைமுக மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன.
அதாவது, கல்லூரி நிர்வாகம் கேட்கும் நன்கொடையைத் தர ஒப்புக்கொள்ளும் பெற்றோரிடம், குறிப்பிட்டத் தொகை முன்பணமாக பெற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு பதிவு செய்துகொண்ட மாணவர், பிளஸ்-2 தேர்வில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் இடம். இல்லையெனில் முன் பணம் வாபஸ்.
சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள சில பிரபல பொறியியல் கல்லூரிகள், இதுபோன்ற முன்பதிவு நடைமுறையை ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டன.
ஆண்டுக்கு ஆண்டு உயர்வு: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை நிரப்ப எந்தவித வரைமுறைகளும் இல்லாததால் கட்டணத்தைத் தனியார் கல்லூரிகள் நிர்ணயித்துக் கொள்கின்றன. இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது.
பொறியியல் படிப்புகளில் இ.சி.இ. படிப்பே முதலிடம் பிடிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக். (ஐ.டி.) உள்ளிட்டவை உள்ளன.
சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. படிப்புக்கு கடந்த ஆண்டு ரூ. 7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
இது இப்போது ரூ.11 லட்சம் முதல் ரூ. 13 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்தப் படிப்புக்கு ரு. 6 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் முன்பதிவு செய்துள்ள பெற்றோர்.
கல்லூரிகளின் இந்தக் கட்டணக் கொள்ளைக்கு பெற்றோரும் முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
பெற்றோரிடையே போட்டி: அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், சில பெற்றோர் போட்டி போட்டுக்கொண்டு கல்லூரிகள் கேட்கும் நன்கொடையைக் கொடுக்கத் தயாராகின்றனர்.
கல்லூரிகளின் பிரமாண்ட தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு ஏமாந்த காலம் மாறிப்போய், இப்போது படிப்பை முடிக்கும் முன்பே வளாகத் தேர்வு மூலம் வேலை உறுதி என்ற மாயைக்கு பெற்றோரும், மாணவர்களும் அடிமையாகியுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷணன் கூறியது: தனியார் பொறியியல் கல்லூரிகள் இப்போது, மிகவும் கவனமாகவும் நூதன முறையிலும் நன்கொடையை வசூலிக்கின்றன.
இதுபோன்ற நடைமுறைகளால் தகுதியுடைய பல மாணவர்களுக்கு, சிறந்த தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போகின்றது.
இவற்றைத் தடுத்துவிட முடியும். அரசு ஒதுக்கீட்டிலான இடங்களுக்கு நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு போல், சுயநிதிக் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் தனியாக ஒரு ஒற்றைச் சாளர கலந்தாய்வை நடத்தி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பலாம், அல்லது வேறு நடைமுறைகளைக் கையாளலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

