பிற மாநிலங்களுக்கு பால் கொண்டு செல்ல கட்டுப்பாடு: அமைச்சர் மூர்த்தி

கோவை, மே 14: தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்குப் பால் கொண்டு செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆவின் நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டம
பிற மாநிலங்களுக்கு பால் கொண்டு செல்ல கட்டுப்பாடு: அமைச்சர் மூர்த்தி
Updated on
2 min read

கோவை, மே 14: தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்குப் பால் கொண்டு செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆவின் நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி (படம்) தெரிவித்தார்.

 உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 24 முதல் 29 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

 அடுத்த 4 ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் பால் கொள்முதலை அதிகப்படுத்தி, பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்காக பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.

 தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் ஓய்வு பெறுவோருக்குப் பதிலாக புதிய பணியாளர்களும் அலுவலர்களும் நியமிக்கப்படுவதில்லை. இதனால் பணிபுரிவோரின் வேலைப் பளு அதிகரிக்கிறது. கொள்முதல் உயர்வதால் அதற்கேற்பக் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று ஆவின் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 ஆவின் பால் நிறுவனம் கூட்டுறவு விதிகளின்படி இயங்குவதால் இதில் உள்ள ஊழியர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் கிடைப்பதில்லை. எனவே கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இங்குள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர் தொழிலாளர்கள்.

 இதேபோல இங்குள்ள தொழிலாளர்களும் அலுவலர்களும் பதவி உயர்வு பெற்றுப் பல ஆண்டுகளாகிவிட்டன.

 தமிழகத்தில் 35 இடங்களில் உள்ள பால் குளிரூட்டும் நிலையங்களில் கூடுதலாக வசதிகளை நிறைவேற்ற வேண்டும். 2 லட்சம் லிட்டர் பாலை குளிரூட்டும் நிலையப் பகுதியில், சுமார் 2.50 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதையும் குளிரூட்டும் வகையில் ஆவின் குளிரூட்டும் நிலையங்களில் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும்.

 தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் அதிகம். ஆவின் பாலின் விற்பனை விலைக்கும் தனியார் பால் விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசமும் அதிகம்.

 தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கு அதிகத் தொகை கொடுக்கின்றன. இதனால் பல விவசாயிகள் தனியார் பால் நிறுவனங்களுக்கு தங்கள் பாலைக் கொடுக்கின்றனர்.

 கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தனியார் பால் விற்பனை பெரிய அளவில் இல்லை. இதற்குக் காரணம், அங்கு மாநில அரசுதான் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அவ்வாறில்லை. இதனால் தாங்கள் விரும்பும் விலைக்கு தனியார் கொள்முதல் செய்து நல்ல லாபத்துக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது ஆவின் நிறுவனம்தான்.

 இதற்குப் பதிலாக பிற மாநிலங்களில் உள்ளதைப் போல ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் விற்பனை விலையையும் கொள்முதல் விலையையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்.

 இதேபோல கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனம் தமிழக எல்லையோரத்தில் உள்ள கிராமங்களில் பால் கொள்முதல் செய்து கேரளத்துக்குச் சென்று விற்கிறது. இதைத் தடை செய்ய வேண்டும்.÷

 இது தொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, தினமணி நிருபரிடம் கூறியது: ஆவின் நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும். புதிய பணியாளர்களைத் தேர்வு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 பிற மாநிலங்களில் பால் கொள்முதலுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு வழங்கினால் ஆவின் நிறுவனம் மீண்டும் நஷ்டத்துக்குச் செல்லும்.

 பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

 ஆவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்பப் பணியாளர்கள் இல்லை. தனியார் நிறுவனங்கள் போட்டியாக இருந்தாலும் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தந்து உற்பத்தியாளர்களுக்கான திட்டங்களை அறிவித்தால் ஆவின் நிறுவனம் மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com