

கடலூர் மாவட்டத்தில் கடுமையான மின்வெட்டு அமலில் உள்ளது. தினமும் 16 மணி நேரத்துக்கும் மேலாக செய்யப்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் சிறு, குறு தொழில்களும் முடங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
÷மின்வெட்டால் ஐஸ் ஆலைகளில் உற்பத்தி குறைந்துள்ளதால் மீன் பிடி மற்றும் ஏற்றுமதி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
÷கடலூரில் 20-க்கும் மேற்பட்ட ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளதாகத் தெரியவருகிறது. இங்கு உற்பத்தியாகும் ஐஸ் கட்டிகள், பெரும்பகுதி கடலூர் மாவட்ட மீன் பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
÷நேரம் காலம் ஏதுமின்றி, திடீர் திடீரென்று பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஐஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அத்தொழிலை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
÷இதனால் ஐஸ் உற்பத்தி தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஐஸ் ஃபாக்டரிகள் 24 மணி நேரமும் இயங்குபவை. ஐஸ் உற்பத்தி செய்ய குறைந்தது 18 மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் ஐஸ் உற்பத்தி 50 சதவீதம் கூட நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர்.
÷கடலூர் கடற்கரையோர கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். பெரிய படகுகளில் சென்று ஆழ்கடலில் ஒரு வாரத்துக்கு மேல் தங்கி இருந்து, மீன் பிடிக்கும் மீனவர்கள், மீன்களைப் பதப்படுத்தி வைக்க, ஏராளமான ஐஸ் கட்டிகளைப் படகுகளில் எடுத்துச் செல்வர்.
÷ஐஸ் கட்டிகள் தரமானதாக, போதுமான அளவுக்குக் கிடைக்காததால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வெளியூர்களுக்கு மீன்களை எடுத்துச் செல்வதும் தடைபட்டு உள்ளது.
÷இந்நிலையில் ரூ.40 முதல் 50 வரையில் விற்பனையான ஐஸ் கட்டிகள் தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
÷அதுவும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து ஐஸ் கட்டிகளை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதால் இருமடங்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.