தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :1 ஜூலை 2013, 9:49 pm

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் கடந்த 1991-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. சட்ட விரோத அமைப்புகள் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மத்திய அரசு நீட்டிப்பு செய்து வருகிறது.

இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்கு தடையை நீட்டிப்பு செய்வதற்கான அறிவிக்கையை 14.5.2010 அன்று மத்திய அரசு வெளியிட்டது. இந்த தடை நீட்டிப்பு சரிதானா என்பதை ஆராய்வதற்காக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தில்லி, சென்னை, உதகை உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்ட இந்த தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்தது சரியே என்று 12.11.2010 அன்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வழக்குரைஞர் பி.புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் வைகோ மற்றும் புகழேந்தி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து விடுதலைப் புலிகள் அமைப்பு வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் இருவரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த தடை நீட்டிப்பால் மனுதாரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில் இந்த வழக்கை தொடரும் தகுதி அவர்களுக்கு இல்லை.

2010-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின்படி தடையானது இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அந்த இரண்டு ஆண்டு காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது.

தடை நீட்டிப்பை ஆராயும் தீர்ப்பாயம் தில்லியில்தான் அமைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம் தில்லி உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. ஆகவே, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும்.

இது தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை உள்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் விடுதலைப் புலிகளுக்கு பங்கு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆகவே, இது போன்ற பல்வேறு காரணங்களால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவும், அந்த உத்தரவை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் சரியானதே என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.