முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையில் ஆஜர் ஆகாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி கேப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விஜயகாந்த் பேச்சு தொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அந்த மனுவை தாக்கல் செய்தார்.
அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு தரப்படும் விளம்பரங்கள் குறித்து பேசிய விஜயகாந்த், உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூலை 1-ஆம் தேதி விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
எனினும் விஜயகாந்தோ அல்லது அவரது வழக்குரைஞர்களோ யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விஜயகாந்துக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை இம்மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









