பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸ்: பெட்ரோல், டீசல் விலை என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய அரசு மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது.
ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாகவே பெட்ரோலிய பொருள்களின் விலைகள் உயர்த்தப் பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது.
ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளும், பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஊக்குவிப்பு என்ற பெயரில் வாரி வழங்கியதும்தான் காரணமாகும். மத்திய அரசின் தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளுக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்களைத் தண்டிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
வைகோ: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.
தாறுமாறான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மக்கள் மீது சம்மட்டி அடி கொடுப்பதுபோல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










