தட்பவெப்ப நிலை மாற்றம்: அச்சத்தில் முந்திரி விவசாயிகள்

மழையின்மை, கடும் பனிப்பொழிவு, பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் போன்ற தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக முந்திரி மகசூல் பாதிக்கப்படுமா என்ற ஐயத்தில் முந்திரி விவசாயிகள் உள்ளனர்.
தட்பவெப்ப நிலை மாற்றம்: அச்சத்தில் முந்திரி விவசாயிகள்
Updated on
1 min read

மழையின்மை, கடும் பனிப்பொழிவு, பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் போன்ற தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக முந்திரி மகசூல் பாதிக்கப்படுமா என்ற ஐயத்தில் முந்திரி விவசாயிகள் உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை சீற்றத்தின் காரணமாக முந்திரி விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி, கடலூர் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் 28,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரி காடுகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் 22,168 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

முந்திரி பயிர் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டப்பட்டதுடன், முந்திரி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரித்து இருந்தது. இதனால் கிராமப் பொருளாதார வளர்ச்சி சிறப்படைந்திருந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே வெயில், கனமழை, கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முந்திரி மகசூல் பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் திருப்திகரமாகவே இருந்தது. முந்திரி, பலா ஒன்றே இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம்.

கடந்த டிசம்பர் மாதம் புயல் தாக்கியதில் கடலூர் மாவட்டம் சின்னாபின்னமானது. விவசாயப் பயிர்கள் சேதம் அடைந்தன. முந்திரி, பலா மரங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. புயலில் தப்பிய முந்திரி மரங்களிலிருந்து சுமார் 30 சதவீதம் மகசூல் கிடைத்தது விவசாயிகளுக்கு ஓரளவு ஆதரவாக இருந்தது.

இப்போது முந்திரி மரங்களில் முன்னதாகவே பூக்கள் பூத்து பிஞ்சுகள் எடுத்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்திருந்தாலும், மழையின்மை, கடும் பனி, பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் ஆகியவைகளால் பூக்கள் கருகி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறியது: டிசம்பர் மாதம் மழைக்கு பின்னர் பிப்ரவரி மாதத்தில் பூ எடுக்கும். மழை இன்மையாலும், வெயிலின் தாக்கம் உள்ளதாலும் முன்கூட்டியே பூக்கள் எடுத்துள்ளன. இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பூக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை, மேலும் முதலில் பூக்கும் பூக்கள் ஆண் பூ என்பதால் காய்ப்பு வராது. இருப்பினும் தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பரிந்துரை செய்யும் மருந்தை தெளிப்பதன் மூலம் மகசூல் இழப்பைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com