/

வனத்துறை கட்டுப்பாட்டில் பழவேற்காடு: வளர்ச்சிப் பணிகள் முடங்கும் அபாயம்!

பொன்னேரி, ஜூன் 5: பழவேற்காட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு மத்திய வனத்துறையினர் 13,700 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி உள்ளதன் காரணமாக அப்பகுதியில் மாநில அரசின் சாலை அமைப்பது, மேம்பாலம் கட்டுவது உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:03 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, ஜூன் 5: பழவேற்காட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு மத்திய வனத்துறையினர் 13,700 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி உள்ளதன் காரணமாக அப்பகுதியில் மாநில அரசின் சாலை அமைப்பது, மேம்பாலம் கட்டுவது உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டைச் சுற்றிலும் லைட்ஹவுஸ் குப்பம், அரங்கம்குப்பம், கூனங்குப்பம், சாட்டான்குப்பம், திருமலைநகர் குப்பம், செம்பாசிப்பள்ளி குப்பம், வைரவன்குப்பம், பசியாவரம், நடுக்குப்பம், கோரக்குப்பம், கரிமணல், நக்கத்துறவு, பள்ளிக்குப்பம், பேட்டை, கோட்டைகுப்பம், தாங்கல் பெரும்புலம், அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காட்டில் பறவைகள் சரணாலயம், புனித மகிமை மாதா ஆலயம், டச்சு கல்லறைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இங்குள்ள பறவைகள் சரணாலயத்துக்காக பழவேற்காடு பகுதியில் உள்ள விவசாய நிலம், குடியிருப்பு நிலங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகள் ஓரம் அமைந்துள்ள 13 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் வருவாய்த் துறையால் கையகப்படுத்தப்பட்டு மத்திய வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில்தான் மேற்கண்ட மீனவ கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு மே மாதம் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள மத்திய வனத்துறை மூலம் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பழவேற்காடு பகுதியில் உள்ள வீட்டு மனைகளை விற்கவோ, வாங்கவோ கூடாது, அப்பகுதியில் புதிதாக வீடுகள் கட்டக் கூடாது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலைகள் போடக் கூடாது, அரசுப் பள்ளிக் கட்டடங்கள் ஏதும் புதிதாக கட்டக்கூடாது மற்றும் பாலங்கள் கட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக மீன் பிடித்தொழில் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலர் நித்தியானந்தம் தெரிவித்தார்.

மத்திய வனத்துறை உத்தரவு காரணமாக ரூ.13 கோடி செலவில் பழவேற்காட்டில் அமைக்கப்படவிருந்த 5 புயல் பாதுகாப்பு மையங்கள் பணிகள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு ரத்தாகும் நிலையில் உள்ளன.

மேலும் சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் ரூ.2.60 கோடி செலவில் பழவேற்காட்டில் படகு துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு மேற்கண்ட தடை உத்தரவு காரணமாக இப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று சுனாமி திட்ட நிதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த பழவேற்காடு - பசியாவரம் இணைப்பு மேம்பாலப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன என நித்தியானந்தம் தெரிவித்தார்.

மத்திய வனத்துறைச் சட்டம் காரணமாக பழவேற்காடு பகுதியில் வசிக்கும் தனிநபர்கள் கான்கீரிட் வீடுகள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் சாலை அமைப்பது, பள்ளிக் கட்டடங்கள், மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழவேற்காடு பகுதியில் முடங்கியுள்ள திட்டங்கள் தொடங்க வேண்டுமெனில் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் மேற்கண்ட திட்டங்களை அமல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே பணிகளை தொடங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

முதல்வருக்கு கோரிக்கை மனு... பழவேற்காடு பகுதியில் மத்திய வனத்துறை அறிவித்துள்ள தடை ஆணை குறித்து, முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி அப்பகுதி மக்களின் நலன் கருதி அங்குள்ள குடிசை வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றி அமைக்கவும், மீனவ மக்கள் மேம்பாடு அடையும் வகையில் கொண்டு வரப்பட்ட மீன் இறங்குதளம், பசியாவரம் - பழவேற்காடு மேம்பாலம் உள்ளிட்டப் பணிகளை விரைந்து தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி அப்பகுதி மக்கள் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.