

கடலூரில் 13 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மாங்குரோவ் காடுகள் பராமரிப்பின்றி, அழிந்து கொண்டு இருக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும், இயற்கை ஆர்வலர்களையும், விஞ்ஞானிகளையும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மாங்குரோவ் காடுகள் இருந்ததால்தான், சுனாமிப் பேரலைகள் தாக்கியபோது அப்பகுதிகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
எல்லா இடங்களிலும் மாங்குரோவ் காடுகளை உருவாக்கிவிட முடியாது. பிச்சாவரத்துக்கு அடுத்தபடியாக கடலூர் உப்பங்கழிப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்க்க நல்ல சூழ்நிலை இருப்பதாக வனத்துறையினரால் கண்டுபிடித்து அறிவிக்கப்பட்டது.
எனவே, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையில் உள்ள உப்பங்கழிப் பகுதிகள் மற்றும் கடலூர் முதுநகர் பனங்காட்டுக் காலனி முதல் துறைமுகம் ரயில் நிலையம் வரை நீண்டு கிடக்கும் உப்பங்கழிப் பகுதிகளிலும், வனத்துறையினர் மாங்குரோவ் காடுகளில் வளரும் செடிகளை நட்டு வளர்த்தனர்.
எதிர்பார்த்தப்படி பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் வளரும் செடிகள், இங்கும் சிறப்பாக வளர்ந்தன.
இரு பகுதிகளிலும் மாங்குரோவ் காடுகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவற்றை வனத்துறையினர் முறையாகப் பராமரிக்கவில்லை.
பாதுகாப்பற்ற நிலை, பொதுமக்கள் விறகுக்காக வெட்டிச் செல்லுதல், ஆடு மாடுகள் மேய்தல், பட்டுப்போன செடிகளுக்குப் பதில் புதிய செடிகளை நடாதது போன்ற காரணங்களால், பெரும்பாலான மரங்கள், செடிகள் அழிந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையிலும் கூட ஏராளமான செடிகள் செழித்து வளர்ந்து கண்ணைக் கவரும் நிலையில் காணப்படுகிறது. பிச்சாவரத்தில் இப்போதும் புதிய உப்பங்கழிக் கால்வாய்களை வெட்டி, புதிய செடிகளை நடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.ஆனால் கடலூரில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க நிறைய வாய்ப்புகள் இருந்தும், வனத்துறை பின்வாங்கிச் சென்றது ஏன்? என்று தெரியவில்லை.
இச்செடிகளை வளர்க்க வனத்துறை தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. புதியச் செடிகளை நட்டு, தொடர்ந்து கடல் நீர் கிடைக்கும் வகையில் வாய்க்கால்களை உருவாக்கினாலே போதும்.
ஆடு மாடுகள் மேய்ந்து விடாதபடியும், பொதுமக்கள் சேதம் விளைவிக்காமலும் பார்த்துக் கொண்டாலே போதும்.
அரசு நினைத்தால் பரங்கிப்பேட்டை முதல் மரக்காணம் வரை பல கி.மீ. தூரம் நீண்டு கிடக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படும் உப்பனாறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் முழுவதும் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வாய்ப்பு உள்ளது.5 ஆண்டுகளில் சிறந்த மாங்குரோவ் காட்டை கடலூரிலும், உப்பனாற்று நீர்வழிப்பாதை நெடுகிலும் பார்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பராமரிப்பில்லாமல் பாழாகிவரும் மாங்குரோவ் காடுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.