அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டத்தில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் டி.என்.வெங்கடேஷ் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் புதன்கிழமை மாலை நடந்த கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளர் பங்கேற்று வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் குறித்தும், தேசிய அளவிலான வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப்பணிகள் குறித்து விவரமாக அலுவலர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இம்மாவட்டத்தில் மொத்தம் 1807 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நகர்பகுதியில் 1400 வாக்காளர்கள் மற்றும் கிராமங்களில் 1200 வாக்காளர்களுக்கு மேல் அதிகமாக உள்ளதை பிரித்து புதிய பாகங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் உருவாக்கவும், பழுதடைந்த வாக்குச்சாவடி மையங்களை இடம் மாற்றம் செய்யவும், பெயர் மாற்றம் இருந்தால் அதனை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சட்டப்பேரவை தொகுதிகள் நகரம் மற்றும் ஊரகம் வாரியாக சீரமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளின் விவரம். ராஜபாளையம்-9, ஸ்ரீவில்லிபுத்தூர்-7, சாத்தூர்-11, சிவகாசி-15, விருதுநகர்-8, அருப்புக்கோட்டை-1, திருச்சுழி-2 ஆக ஊரக பகுதியில் 38, நகர் பகுதியில் 15ம் என மொத்தம் 53 வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்படவுள்ளன.
எனவே வாக்குச்சாவடிமைகளை சீரமைப்பது, இடம் மாற்றம் செய்வது தொடர்பாக தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கும்படி அனைத்து கட்சியின் நிர்வாகிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், அங்கிகாரம் பெற்ற அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.