வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் காரைக்கால் மாவட்ட விசைப்படகு, பைபர் படகுகள் அனைத்தும் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பகல், இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலையடுத்து புதுச்சேரி அரசு நிர்வாகமும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென அந்தந்த மீனவ கிராமங்களுக்கு மீன்வளத் துறை மூலமாக தகவல் அனுப்பியது.
வானிலை ஆய்வு மையத்திலிருந்து எச்சரிக்கை தளர்வு வந்தால் மட்டுமே கடலுக்குள் செல்வோம் என விசைப் படகு மீனவர்கள் தெரிவித்தனர்.