விஷ்ணுபிரியா வழக்கை திசை திருப்பும் முயற்சி நடக்கிறது: தந்தை குற்றச்சாட்டு
டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை திசை திரும்பும் முயற்சி நடக்கிறது என்று அவரது தந்தை ரவி குற்றம்சாட்டியுள்ளார்.


டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை திசை திரும்பும் முயற்சி நடக்கிறது என்று அவரது தந்தை ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் கோண்டூரைச் சேர்ந்தவர் ர.விஷ்ணுப்பிரியா. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் கடந்த 18-ம் தேதி முகாம் அலுவலக குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து காவல்கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் கொடுத்த மனஉளைச்சலே விஷ்ணுபிரியாவின் இறப்பிற்கு காரணம் என்று அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணுபிரியாவிற்கும் சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும் காதல் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் தொடர்புகளை செல்லிடப்பேசியிலிருந்து சிபிசிஐடி போலீஸார் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வழக்கு வேறு கோணத்தை நோக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது வழக்கினை திசைதிருப்பும் முயற்சியென விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூரில் உள்ள நாராயணர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடையவர் விஷ்ணுபிரியா. நாங்களும் அக்கோயிலுக்கு சென்று வந்துள்ளோம். அரசுப்பணி கிடைத்த போதிலும், காவல்துறை அதிகாரிக்கான பயிற்சி முடித்து பணியேற்கும் முன்பும் தோழிகளுடன் அவர் அக்கோயிலுக்குச் சென்று வந்தார். அப்போது அக்கோயிலின் குருக்களுடனும் அவரது குடும்பத்தினருடனும் பேசுவார். நாங்களும் அவருடன் பலமுறை பேசியுள்ளோம். இதற்காக அவரது மகனுடன் காதல் உள்ளது என்பதை ஏற்கமுடியாது.
விஷ்ணுபிரியா இறப்புடன் அதனை தொடர்புபடுத்தி பேசுவது வழக்கினை திசை திருப்பும் முயற்சியாகும். இந்த வழக்கில் ஏற்கனவே நான் பல சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். அதற்கு போலீஸாரிடமிருந்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. என்னிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவில்லை. குடும்பத்தினரிடம் முழுமையாக விசாரிக்காமல் வழக்கினை வேறு திசை நோக்கி எடுத்துச்செல்கின்றனர்.
இந்த வழக்குத்தொடர்பான உண்மை நிலவரங்கள் வெளிவர வேண்டுமெனில் நாமக்கல் காவல்கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...