மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர் மலையிலிருந்து மதுரை வந்த கள்ளழகர், இன்று காலை பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காண வைகையாற்றில் இறங்கினார்.
அப்போது வைகை ஆற்றை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள், வைகையாற்றில் இறங்கிய கள்ளழகரை மலர்தூவி வரவேற்றனர்.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம், ஏராளமான பக்தர்கள் அழகர் வேடமிட்டு ஆடி வந்தது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக புதன்கிழமை மாலை அழகர் மலையிலிருந்து ஸ்ரீகள்ளழகர் தோளுக்கினியனாக தங்கப் பல்லக்கில் புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி வழியாக வந்த கள்ளழகர் வியாழக்கிழமை காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் சொம்பில் நிரம்பிய சர்க்கரையில் தீபம் ஏற்றி வரவேற்று வழிபட்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர் புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலுக்கு பகல் 11 மணிக்கு எழுந்தருளினார். அதன் பிறகு தனியார் மண்டகப்படிகளில் எழுந்தருளியவாறு புதுநத்தம் சாலையில் உள்ள ஊரக காவல் கண்காணிப்பாளர் இல்லம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்டவற்றில் எழுந்தருளி மாலை 4 மணிக்கு அழகர்கோவில் சாலை அம்பலகாரர் மண்டகப்படி பகுதிக்கு வந்தார். அங்கு மதுரை மாநகராட்சி மக்கள் சார்பில் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கள்ளழகரை பார்த்து தரிசனம் செய்தனர். பின்னர் கள்ளழகர் ஒவ்வொரு மண்டகப்படியாக எழுந்தருளியவாறு இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமான பின்னர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு நாட்டின் நலனை குறிக்கும் பட்டாடை சார்த்தப்பட்டது.
பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் அருகே இருந்த ஆயிரம்பொன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, வைகை ஆற்றை நோக்கிப் புறப்பாடானார். கள்ளழகரை தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதிகளில் விடிய, விடிய குழுமியிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
கருப்பணசாமி, அழகர் வேடமணிந்த பக்தர்கள் திரியாடியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் சலங்கை அணிந்தபடி வலம் வந்தனர். இதனால், தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. மதுரை நகர் மட்டுமன்றி கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கள்ளழகரை தரிசிக்க இங்கு வந்திருந்தனர். அவர்கள் குடும்பம் குடும்பமாக மதிச்சியம், வைகை ஆற்றோரப் பகுதிகளில் தங்கி இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.