சிதம்பரம்: டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி. அது கடைசி வரை நிற்குமே தவிர நகராது என்று அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா தனது பிரசாரக் கூட்டத்தின் போது கூறினார்.
சிதம்பரம் மேலரதவீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசினார்.
திருமாவளவன் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் விஜயகாந்தை, அம்பேத்கர் வடிவில் காண்கிறேன் என கூறியதை கேட்டபின் திருமாவளவன் மீது இருந்த மரியாதை போய்விட்டது.
கடந்த தேர்தலில் விஜயகாந்த் தண்ணி வண்டி, குடிகாரன் என கூறிய திருமாவளவன், தற்போது அவரை கண்ணியமான அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்.
டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி. அந்த வண்டி கடைசி வரைக்கும் நிற்குமே தவிர நகராது. தமிழ்நாட்டு அரசியலில் பகல் கனவு காணுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும்தான் என நடிகை விந்தியா பேசினார்.
கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.