திருச்செந்தூர்: திருச்செந்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த 9 இலங்கை தமிழர்களிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் தொடர் விசாரணைக்காக அவர்களை கன்னியாகுமரிக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். இலங்கையைச் சேர்ந்த கோபிநாத் (32), அவரது மனைவி ஷோபனா (26), தயாகரன் (45), குருவிந்தன் (25), தர்சன் (25), சத்யசீலன் (32), தயாநந்தன் (35), சாந்தரூபன் (35), ரோபின் பிரசாத் (25) ஆகிய 9 தமிழர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தலைநகர் கொழும்புலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தனர்.
சுற்றுலா விசா மூலம் வந்த அவர்கள் தமிழகத்தில் சென்னை, வேளாங்கன்னி, மதுரை, பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். அதன்பின்னர் கடந்த 25-ம் தேதியன்று திருச்செந்தூர் வந்து, இங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் கேரளா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்வதற்காக ஏஜென்ட் ஒருவர் முன்னேற்பாடு செய்து வந்ததாக
கூறப்படுகிறது. இது பற்றி கியூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் தலைமையிலான 10 காவல்துறையினர் திங்கட்கிழமையன்று அதிகாலை 2.30 மணியளவில்,திருச்செந்தூர் தனியார் விடுதிக்கு வந்து, இலங்கைத்தமிழர்கள் 9 பேர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணைக்காக, அவர்கள் அனைவரையும் கன்னியாகுமரிக்கு அழைத்துச்சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.