சிதம்பரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.மிதுவர்ஷினி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடமும், சிதம்பரம் நகரில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.மிதுவர்ஷினி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ரகு நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் பணியாற்றுகிறார். தாயார் ராஜேஸ்வரி அண்ணாமலைப் பல்கலையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். மாணவி மிதுவர்ஷினி பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்- 98, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல் 100. மொத்தம் 497
இதுகுறித்து மாணவி ஆர்.மிதுவர்ஷினி தெரிவித்தது: பள்ளியில் நடத்தப்படும் பாடத்தை அன்றன்று படித்து வந்தேன். முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் எனக்கு ஊக்கமளித்தனர். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. மேலும் பிளஸ்ஒன்னில் பயாலஜி குரூப் எடுத்து படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க உள்ளேன் என மிதுவர்ஷினி தெரிவித்தார். சாதனை படைத்த மாணவியை பள்ளி நிர்வாகி சி.ஆர்.லட்சுமிகாந்தன், தாளாளர் கஸ்தூர், முதல்வர் ஜி.சக்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.